மூழ்கிய முடிச்சூர்.. களத்தில் இறங்கிய பேரிடர் மீட்பு குழு..!
கனமழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள சென்னை புறநகர் பகுதியான முடிச்சூரில் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2015 டிசம்பரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமானது சென்னை புறநகர்ப்பகுதியான தாம்பரத்தை அடுத்த முடிச்சூர்.
இந்த முறையும் முடிச்சூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் முடிச்சூர் பகுதியே தண்ணீரில் மூழ்கியுள்ளது. அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கி தனித்தீவாக மாறியுள்ளது முடிச்சூர்.
அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதி என்பது தெரிந்தும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் முடிச்சூர் பகுதி மக்கள், தேங்கிய தண்ணீரை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பேரிடர் மீட்புக்குழுவினர் முடிச்சூர் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.