கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரம் முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்கு விசாரணைகள் காணொலி மூலம் நடத்தப்பட்டு வந்தன. இதனிடையே சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். அந்த வகையில் தற்போது நீதிமன்றங்களிலும் காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு முறையில் முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் மார்ச் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார். அவரை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 7 ஆம் தேதி முதல் முழுமையான நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுக்குறித்து பேசிய அவர், கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கும் போது சிக்கல்கள் ஏற்பட்டதாக சக நீதிபதிகள் தெரிவித்ததன் அடிப்படையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்த தற்போது தடை விதித்துள்ளார். இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த காணொலி விசாரணை நிறுத்தப்படும் என தெரிகிறது. மேலும் வரும் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
