ஆயிரக்கணக்கான விவசாயிகளோடு திருச்சி விமான நிலையத்தை திணற அடித்த தினா!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளுடன் சேர்ந்து தினகரன் திருச்சியில் விமான நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பங்கேற்றனர். தினகரன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் போன்ற தலைவர்கள் வேனில் நின்றபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அய்யாகண்ணு, "விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை ஆரம்பித்து வைத்தவர் தினகரன்" என புகழாரம் சூட்டினார். அநாதைகளாக இருந்த எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் தினகரன் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், விவசாயிகளும் திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் குவிந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையங்களுக்கு செல்வோரும், வெளியே வருவோரும் உரிய நேரத்தில் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அங்கே சேர்ந்தது.
சமீபத்தில் மும்பையை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள் போல திருச்சியில் டெல்டா விவசாயிகளின் பேரணி நடந்தது திருச்சியை திணறடித்தது. எங்கு பார்த்தாலும் பச்சை துண்டு கட்டிடிக்கொண்டு விவசாயிகள் தலையாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தினகரனுடன் அவரது ஆதரவாளர்களும் திருச்சியில் குவிந்ததால் விமான நிலையம் பகுதியே ஸ்தம்பித்தது.
திருச்சி விமான நிலையத்தை சூழ்ந்த விவசாயிகளும், தினகரன் ஆதரவாளர்களும், தடையை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்புகளை உடைத்து எறிந்தனர்.
இதன்பிறகு அய்யாகண்ணு தலைமையில் காவிரி தொடர்பாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன இதையடுத்து தினகரன், அய்யாகண்ணு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.