Did the Governor study the entire village of Kanyakumari? BR.Pandian ...

கன்னியாகுமரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊர் ஊராக ஆய்வுக்குச் செல்லும் ஆளுநர் கன்னியாகுமரி மாவட்டத்தை முழு ஆய்வு செய்திருந்தால் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சேத மதிப்புகளை தனது உரையில் குறிப்பிட்டிருப்பார் என்று விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.

"கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2–ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் தொடக்க நாட்களில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அரசியல் கட்சியினர் தலைமை ஏற்று போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7–வது நாளான நேற்று இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் (தி.மு.க.) தலைமை வகித்தார். பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:

"கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக விவசாய அமைப்புகள் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய இந்த சத்தியாகிர போராட்டம் சென்னை வரை எதிரொலிக்கிறது.

ஆளுநர் உரையில் ஒகி புயல் நிவாரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஊர், ஊராக ஆய்வுக்கு செல்லும் ஆளுநர் கன்னியாகுமரி மாவட்டத்தை முழு ஆய்வு செய்திருந்தால் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சேத மதிப்பீடுகளை அவரே குறிப்பிட்டிருப்பார்.

மத்திய அரசு கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்" என்று அவர் பேசினார்.

இந்தப் போராட்டத்தில், பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், பாசன சபை கூட்டமைப்பு தலைவர் செல்லப்பா, கருங்கல் ஜார்ஜ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.