தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தில் குரு முதல்வரின் குருவான கயிலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா மற்றும் தருமபுரம் ஆதீன கர்த்தரின் பட்டணப்பிரவேச விழா ஆண்டுதோறும் தருமபுரம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் நாள் விழாவில் நடைபெறுவது வழக்கம்.
ஞானபுரீஸ்வரர் ஆலயத்தின் வைகாசி திருவிழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச விழா இரவு கோலாகலமாக தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்றது.
அமித் ஷா தமிழ்நாடு வருகை: பாஜகவுக்கு கைகொடுக்குமா? பின் தங்குவது ஏன்?
தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் பூண்டு தங்க குரடு பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கினை நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள், சென்டைமேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார். ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு பிரசாதமாக வழங்கினார்.
புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டிணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். வீதியுலா முடிவடைந்து ஆதீன குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தருமபுர ஆதீனம் அருளாசி வழங்கினார்.