தனுஷ்கோடி கடலில் மிதந்த 140 கிலோ கஞ்சா; சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடியாம்…
தனுஷ்கோடி கடலில் 140 கிலோ மதிப்புள்ள கஞ்சா மிதந்தன. அதனைக் கைப்பற்றிய காவலாளர்கள் அதன் சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்றனர். .
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏராளமான பார்சல்கள் மிதக்கின்ற என்ற தகவலை காவலாளர்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இரவீந்திரன் தலைமையில் தனுஷ்கோடி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தனிப்பிரிவு காவலர் மாணிக்கம் உள்பட காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது தனுஷ்கோடி கடல் பகுதியான எம்.ஆர்.சத்திரம் – அரிச்சல்முனை இடையேயான கடலில் மிதந்த 70 பார்சல்களை காவலாளர்கள் கைப்பற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 70 பார்சல்களில் மொத்தம் 140 கிலோ கஞ்சா இருந்தது. அதனைக் கைப்பற்றி காவலாளர்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்த கஞ்சாவை கடத்தல்காரர்கள் ஏர்வாடி அல்லது வேதாளை கடற்கரையில் இருந்து படகு மூலம் ஏற்றி இலங்கைக்கு கடத்தி சென்றிருக்கலாம் எனவும், நடுக்கடலில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரை கண்டதும் கடலில் வீசி தப்பியிருக்கலாம் அல்லது கஞ்சா பார்சல்களை வாங்க வர வேண்டிய கடத்தல் ஏஜெண்டுகள் வராததால் கடலில் வீசிப்பட்டு இருக்கலாம் என்று காவலாளர்கல் யூகித்தனர்.
இது தொடர்பாக தனுஷ்கோடி காவலாளர்கள் வழக்குப்பதிந்து கஞ்சா பார்சல்களை கடலில் வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 140 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1½ கோடி இருக்குமாம்.