தமிழ்நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள்.. டிஜிபி சைலேந்திரபாபு பட்டியலை வெளியிட்டார் !!
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் நிலையங்கள் மற்றும், மாநகர காவல் நிலையங்களுக்கும் தனித்தனியாகப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், சென்னை மாநகர காவல் நிலையங்களை பொறுத்தவரை, பி1 வடக்கு கடற்கரை காவல் நிலையம், பி1 புளியந்தோப்பு காவல் நிலையம், ஜே1 கண்ணகி நகர் காவல் நிலையம், இ1 மயிலாப்பூர் காவல் நிலையம் ஆகிய 4 காவல் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.
பிற மாநகராட்சி காவல் நிலையங்களில், திருச்சி மாநகராட்சியில் கன்டோன்மண்ட் காவல் நிலையம், கோவை மாநகரில் இ2 பீளமேடு காவல் நிலையம், சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம் காவல் நிலையம், திருநெல்வேலி மாநகராட்சியில் தச்சநல்லூர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.