டெங்கு எதிரொலி.! 50,000 பேருக்கு வீட்டுக்கே சென்று நிலவேம்பு கசாயம்..!
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். டெங்குவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
டெங்கு பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள், தன்னிச்சையாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகளை வாங்க வேண்டாம் எனவும் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சென்னை முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், குப்பை மற்றும் சாக்கடையால் டெங்கு பரவாது என்றும் நல்ல தண்ணீரில் கொசு உருவாகாமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 3 நாளில் 50,000 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 35 வாகனங்களில் சுகாதார பணியாளர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். ஒரு நாளைக்கு 2,000 நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.