Demonstrators for cancel the online registration procedure ...
இராமநாதபுரம்
இணையவழி பத்திரப்பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திர எழுத்தர்கள் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் சுமார் 120-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சொத்து பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இணையவழி பத்திரப்பதிவை கொண்டுவந்துள்ளது. இதனால். நிர்வாக சிக்கல், இணையதள பாதிப்பு, மற்றும் மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவற்றால் நாள்தோறும் இந்த அலுவலகத்திற்கு மக்கள் வந்து காத்துக்கிடக்கின்றனர்.
அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது இத்தகைய நடைமுறையால் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இணையவழி பதிவுக்கு செலுத்த வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுத் தொகை போன்றவற்றை இணையவழி மூலம் செலுத்தும்போது அது செலுத்துபவரின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால், அந்த கணக்கு சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கணக்கில் காட்டப்படாமல் உள்ளது. இதனால் பணம் செலுத்தியும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இதுதவிர நடைமுறை சிக்கல்களும் அதிகளவில் இருப்பதால் பத்திர எழுத்தர்களும், மக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இணையவழி பத்திரப்பதிவு முறையைக் கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தர் கந்தசாமி தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திர எழுத்தர்கள் சாத்தையா, அமீர் சுல்தான், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சார்பதிவாளரிடம் வழங்கினர்.
