பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
அரியலூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், அண்ணாசிலை அருகே தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்க நிறுவன தலைவர் நல்லப்பன் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு 10 மாதங்களாக வேலை இல்லை, ஊதியமும் இல்லை. இதனால் வறுமையில் வாடுகின்றனர். எனவே உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.
12 ஆண்டுகள் அனுபவத்தை கணக்கில் வைத்து டி.என்.ஆர்.டி.பி. திட்டத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும்.
2017 ஜூன் முதல் 2018 மார்ச் வரை வேலையில்லாமல் இருக்கும் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.
நிலுவையிலுள்ள ஈட்டிய விடுப்புத் தொகையையும் உடனே வழங்கிட வேண்டும்.
பெரம்பலூர், தர்மபுரி, அரியலூர் ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் டி.என்.ஆர்.டி.பி. திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பரிமளம் நன்றி தெரிவித்தார்.