ஆதி திராவிடர்களுக்கான சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர்
ஆதி திராவிடர்களுக்கான சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதி திராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், ஆதி திராவிடர்களுக்கான சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க அரசை கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்டம், பனகல் கட்டிடம் முன்பு தெற்கு மாவட்ட காங்கிரசு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் பொன்.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராம்பிரசாத்,
யோகானந்தம், வட்டார தலைவர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், வக்கீல் மைனர், ரமேஷ், இப்ராகிம் உள்பட பலர் பங்கேற்று "ஆதி திராவிடர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.