மானாமதுரை,
மானாமதுரையில் துபாய் காந்தியை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த வழக்கிலும், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இமானுவேல் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானாமதுரையில் கடந்த 24–ஆம் தேதி தொழில் அதிபர் துபாய் காந்தியை மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். அன்றைய தினமே கிளங்காட்டூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை காவலாளர்கள் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன்பு இமானுவேல் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இமானுவேல் பேரவை மாவட்ட தலைவர் சங்கர் அம்பேத்கர் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் முத்தையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி, இமானுவேல் பேரவை பொதுச்செயலாளர் சந்திரபோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “பெட்ரோல் குண்டு வீசப்பட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்க வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி செயலாளர் புலிப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
