defamation case on actor sethil filed by mp kumar stay extend to nov 29

அவதூறு வழக்கு ஒன்றில், நடிகர் செந்திலை விசாரிக்க நவ.29ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

டி.டி.வி. தினகரன் தூண்டுதல் பேரில் நடிகர் செந்தில் தம்மை அவதூறாகப் பேசியதாக எம்.பி குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் செந்திலை விசாரிக்க நவ.29 வரை தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி தொகுதி அதிமுக எம்பி குமாரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் பதவியில் இருந்து தினகரன் நீக்கினார். அதன் பின்னர் அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட நடிகர் செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, குமார் எம்பியை விமர்சித்தார்.

செந்தில், தன்னை விமர்சனம் செய்து மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக, எம்பி குமார் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், தினகரன், செந்தில் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் உயர் நீதிமன்ற கிளையில் முறையிட்டார். அதில், ‘சம்பவம் சென்னையில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, தினகரன், செந்தில் மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்த நீதிபதி, நவ.29 ஆம் தேதி வரை விசாரணைக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.