மதுராந்தகம்,

காஞ்சிபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிவந்த பெண் மான் காரில் அடிப்பட்டு இரத்த காயம் அடைந்தது. ஆண் மான் ஏரியில் குதித்து தப்பி ஓடியது.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பிலாஞ்சி, அண்டவாக்கம், வேடந்தாங்கல், கரிக்கிலி, மலைப்பாளையம் போன்ற சுற்றுவட்டார பகுதிகள் மலைப்பகுதிகளாகும்.

இந்த மலையில் மான்கள் போன்ற சிறிய விலங்குகள் வாழ்கின்றன. நேற்று இரவு 7 மணி அளவில் மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இணை புள்ளிமான்கள் ஓடிவந்தன.

அப்போது அந்த வழியாக வந்த காரில் பெண் மான் அடிபட்டது. உடனே ஆண் மான் ஏரியில் குதித்து தப்பிச் சென்றுவிட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மதுராந்தகம் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் அந்த மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் அந்த மானை மீட்டு தங்கள் பாதுகாப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.