வளர்மதியை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - அரசை எச்சரிக்கும் தீபா...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில், எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கதிரா மங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாணவி வளர்மதி, கதிராமங்கலம் கிராம மக்களுக்காக போராட்டம் நடத்தியதால், அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கதிராமங்கலத்தில் போராடிய மாணவி, பேராசிரியர் மற்றும் கிராம மக்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்திருப்பது வேதனைக்குரியது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி உட்பட அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழின விரோதப்போக்கை கையாண்டால் மக்கள் சக்தியையும் அனைத்து கட்சியையும் திரட்டி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்.
இவவாறு அவர் கூறியுள்ளார்.