டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஆரம்பித்த மழை 10 நாட்களுக்கு மேலாக பெய்து, ஊரையே அடித்து சென்றது. அதேபோல் இந்த ஆண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டிசம்பர் 1ம் தேதி மழையில் நனையாமல் அலுவலகம் சென்றவர்கள் கூட, நனைந்து கொண்டுதான் வீடு திரும்புவார்கள் என வானிலை ஆய்வுகள் துல்லியமாகக் கணித்துள்ளன. குறிப்பாக டிசம்பர் 1ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மழை பெய்யத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றத்தழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28ம் தேதி தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு குறிப்பிட்ட அளவில் மழை பெய்யவில்லை. வறண்ட வானிலையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு ஏற்படுகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வங்கக் கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதியை நோக்கி தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் தமிழகத்தில் அதிகமாக குளிர் காணப்படுகிறது. அதிகாலை நேரத்தில் அதிகளவு பனி விழுகிறது. கடலோர பகுதிகளைவிட சேலம், தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் குளிர் இன்னும் அதிகமாக காணப்படும்.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை இன்னும் 2 நாள்களில் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு பருவநிலை மாற்றமடைந்து மழை தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றனர்.