daswanth produce in chennai court and get police custady

சிறுமி ஹாசினி மற்றும் தாயை கொன்றுவிட்டு மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டார்.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சிறுமி ஹாசினியை, தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஜாமீன் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த்தின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்ததோடு,அவருக்கு ஜாமீனும் வழங்கியது.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில், தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, செலவுக்கு பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்த தஷ்வந்த் தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு கடந்த 2-ம் தேதி மாயமானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து தஷ்வந்தைத் தேடிவந்தனர். இதனிடையே, தஷ்வந்த் மும்பையில் இருப்பதாகத் தகவல் வரவே, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் தஷ்வந்த் தலைமறைவாக இருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

 இந்நிலையில் தஷ்வந்த்தை சென்னை கொண்டுவர மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து தேடிவந்த நிலையில், அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தமிழக காவல் துறையினர் நேற்று மீண்டும் கைதுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து , மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்தைக் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவரை இரண்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தஷ்வந்த் நள்ளிரவில் சென்னை அழைத்துவரப்பட்டார்.