daswanth plan to kill his father also

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்த வழக்‍கில் கைது செய்யப்பட்டிருக்‍கும் தஷ்வந்த், தனது தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்த திடுக்‍கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில், குடும்பத்தினருடன் வசித்து வந்தான். எப்போதும் குரூர சிந்தனையுடன் இருந்த அவன், பெற்றெடுத்த தனது தாயை கொன்றுவிட்டு நகை மற்றும் பணத்துடன், மும்பைக்‍கு தப்பிச் சென்றான்.

தமிழக காவல்துறையினர் மும்பை சென்று இந்த கொலைகாரனை கைது செய்தனர். இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவனை, குன்றத்தூர் காவல்துறையினர், 3 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

இந்த விசாரணையின் மூலம் மும்பைக்‍கு தப்பிச்செல்ல அவன் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தாயை கொன்றதுபோல் தனது தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தான்.

நேற்று விசாரணைக்காக தஷ்வந்த் குன்றத்தூர் போலீஸ் ஸ்டேசன் கொண்டுவரப்பட்டபோது, அவனது உறவினர்கள் சிலர் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உறவினர்களை இடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.