Darshwant arrested for killing case

சென்னையை அடுத்த குன்றத்தூரில், சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரன் தஷ்வந்த் நகைக்காக தனது தாயை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்த தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொடூரமாக கொலை செய்தான். 

இதையடுத்து போலீசார் தஷ்வந்தை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் கடந்த செப்டம்பர் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவனை ஜாமீனில் விடுவித்தது. 

இதைதொடர்ந்து தஷ்வந்தின் பெற்றோர் சேகர் – சரளா ஆகியோர், தங்கள் வீட்டை, குன்றத்தூருக்கு இடமாற்றினர். 

அங்கு அவர்களோடு ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்தும் தங்கி இருந்தான். இந்நிலையில், தஷ்வந்த் அவ்வபோது செலவிற்கு பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, தஷ்வந்த் தனது தாயார் சரளாவிடம், செலவுக்கு பணம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. 

அப்போது, ஆத்திரமடைந்த தஷ்வந்த், இரும்பு கம்பியால் சரளாவை சரமாரியாக அடித்துக் கொன்றுவிட்டு, தப்பியோடிவிட்டான். 

பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவனது தந்தை சேகர் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும் அவர் அணிந்திருந்த நகை, மற்றும் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதையும் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் சரளாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து, தஷ்வந்தை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், கொடூர கொலைகாரன் தஷ்வந்தை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர்.