ஐஏஎஸ் அதிகாரியானார் பெண் கூலித் தொழிலாளியின் மகன்…தமிழில் தேர்வு எழுதி சாதனை….
கடலூர் மாவட்டம், வடக்கு மேலூரைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளியின் மகன் மணிகண்டன், யு.பி.எஸ்.சி, தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். மேலும் மணிகண்டன் ஐஏஎஸ் தேர்வை தமிழில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
அகில இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. நிறுவனம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, நேர்முக தேர்வை எதிர்கொண்ட 2,961 பேரில் 1,099 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் முசோரியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்கு மேலூரை சேர்ந்த மணிகண்டன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டனின் அப்பா, ஆறுமுகம் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தார்..ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரால் அந்த வேலையில் நீடிக்கமுடியவில்லை.
இதையடுத்து மணிகண்டனின் தாய் வள்ளி வீட்டு வேலைக்கு சென்றும், வயலில் கூலி வேலை பார்த்தும் அவரை படிக்க வைத்தார்.பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து அவரும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தில் கடுமையான வறுமை இருந்தாலும் படிப்பை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து விடா முயற்சியுடன் படித்து வந்தார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி மருந்து ஆய்வாளராகவும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாளராகவும் பணிபுரிந்த மணிகண்டன் இந்தியன் ரெயில்வேயில் கணக்கு பணியாளராகவும் பணியாற்றினார்.
படிப்பு, பணி என சுறுசுறுப்பாக இருந்தாலும் அவரது கனவு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான்.முதல் முயற்சியாக , 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக முதல்நிலை தேர்வு எழுதிய மணிகண்டன் தோல்வி அடைந்தார். ஆனால் தமிழிலேயே தேர்வு எழுதி, தமிழிலேயே நேர்முக தேர்வை எதிர்கொண்டு ஐ.ஏ.எஸ். ஆகியே தீர வேண்டும் என்று மணிகண்டன் முடிவு செய்தார்.
எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் அவராகவே படித்து கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வை தமிழிலேயே எழுதி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மெயின் தேர்வையும், நேர்முக தேர்வையும் தமிழிலேயே சந்தித்து தற்போது வெற்றிகரமாக ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.