கொடூரம்: மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் பிஞ்சு குழந்தையை எரித்துக் கொன்ற பெற்றோர்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் பிஞ்சு குழந்தையை எரித்துக் கொடூர செயல் புரிந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வேண்டா. இவருக்கு கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு கருத்தடை செய்வது குறித்து சிவக்குமாரிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளாமலும், மருத்துவர்களிடம் தெரிவிக்காமலும் 26-ஆம் தேதி மாலை சிவக்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் குழந்தையுடன் பாய்ச்சலில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆட்சியருக்கு மருத்துவக்கல்லூரி டீன் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாய்ச்சல் கிராம செவிலியர் சிவக்குமாரிடம் சென்று குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், குழந்தையை தனது நிலத்திற்கு கொண்டுச் சென்று எரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பெண் சிசு இறப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கிராம செவிலியர் கூறியுள்ளார். அதன்பேரில் பாய்ச்சல் காவல் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் புகார் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சிவக்குமாரை ஆய்வாளர் பூபதி மற்றும் காவலாளர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
சிவக்குமார் மற்றும் அவரது மனைவி வேண்டா தம்பதிக்கு ஏற்கனவே திவ்யா (9), அர்ச்சனா (7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அவர் கூலி வேலை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சிவக்குமாரிடமும் அவரது மனைவி வேண்டாவிடமும் காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரத்தில் பிஞ்சு குழந்தையை எரித்து கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காவல் நிலையத்திற்கு நேரில் வந்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, திருவண்ணாமலை உதவி ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரேணுகா ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆட்சியர் கந்தசாமி, "செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது.
பெண் சிசு கொலைகள் தடுப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் சராசரி குறைந்து வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்தது முதல் 6 வயது வரை இறப்பு அதிகமாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு கொலையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.