Criminal Procedure Will Be Registered By Crashing Without Permission - Collector Warning ...

திண்டுக்கல்

அனுமதி பெறாமல் சல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் டி.ஜி.வினயிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "கூம்பூர் ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் ஒன்று உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது.

இந்த நிலையில் தனிப்பட்ட சிலர் பெரியகுளத்தில் மீன் வளர்த்து தாங்களாகவே விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்த குளத்தின் அருகே கூரை அமைத்து அதில் தங்கியிருந்து காவல் காத்து வருகின்றனர்.

இந்த குளத்தில் கூம்பூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரேனும் மீன் பிடிக்கச் சென்றால் மீன் பிடிக்க விடாமல் அவர்களை விரட்டி அடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே கூம்பூர் ஊராட்சி பகுதி மக்களின் நலன் கருதி குஜிலியம்பாறை ஒன்றிய நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட பெரியகுளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை டெண்டர் விடவோ அல்லது மக்கள் மீன் பிடித்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தன்னிச்சையாக மீன் பிடித்து கொண்டு மக்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில், இந்தாண்டு சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியது:

"அரசு ஆணைகளின்படி, சல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் சல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சல்லிக்கட்டு நடத்த வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, காவலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று சுதந்திர தணிக்கை குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் சல்லிக்கட்டு நடத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று அந்தக் கூட்டத்தில் அவர் பேசினார்.