சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை...
புதுக்கோட்டை
சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ எச்சரித்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைப்பெற்ற இரத்ததான முகாமில் காவலாளர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மண்டபம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் காவலாளர்கள் பங்கேற்ற இரத்ததான முகாம் நடந்தது.
இதில் ஆயுதப்படை மண்டபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கியும், தொடங்கியும் வைத்தார்.
இதில் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் மெய்யப்பன், முருகானந்தம் உள்பட ஏராளமான ஆண் மற்றும் பெண் காவலாளர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.
இந்த ரத்ததான முகாமை மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தபின்னர், இரத்ததானம் வழங்கிய காவலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி னார்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தமிழன், ஆறுமுகம், காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ, "மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 15 இடங்களில் 2531 காவலாளர்கள் இரத்ததானம் வழங்கியுள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 180 காவலாளர்கள் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. குழந்தை கடத்தல் தொடர்பாக சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத் தளங்களில் பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்க மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. மேலும், அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க வாரம் தோறும் அணிவகுப்பு நடக்கும்போது யோகா பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.