“உங்கள் வீட்டில் ‘TO LET’ போர்டு வைத்திருக்றீர்களா... உஷார்...!!!” - கொள்ளையடிக்கும் காதல் ஜோடிகள் உலா...
கொள்ளையடிக்க வருபவர்கள், தற்போது நூதன முறையை கையாள்கிறார்கள். சிலர் பில்வேறு பொருட்கள் விற்பனை செய்வது போல், வீடுகளை நோட்டமிட்டு, அங்குள்ளவர்கள் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள், வேலை செல்வார்கள் என கண்காணித்து கொள்ளையடிக்கிறார்கள்.
சிலர், மின்வாரிய ஊழியர், மாநகராட்சி ஊழியர் என கூறி, வீடுகளுக்கு சென்று அங்கு நோட்டமிட்டு, அதன்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக வீடுகளில் ‘TOLET’பலகை அமைக்கப்பட்டுள்ளதா என நோட்டமிடுகிறார்கள். பின்னர், அந்த வீட்டுக்கு சென்று அட்வான்ஸ், வாடகை குறித்து பேசி, வீட்டை சுற்றி பார்ப்பது போல் நடிக்கின்றனர்.
பின்னர், அங்குள்ளவர்களை கட்டிப்போட்டுவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். சில இடங்களில் கொலையும் நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
பெரும்பாலும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள், தற்போது சென்னையை வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், மீஞ்சூர், பொன்னேரி, ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் நடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடக எல்லையான ஒசூர் பகுதியில், முனீஸ்வர நகர் விரிவாக்க பகுதியில் மளிகைக்கடை உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு வீட்டில், வீடு வாடகைக்கு விடப்படும் (TOLET) என பலகை இருந்தது.
இதை பார்த்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும்,அந்த வீட்டுக்கு சென்று, வாடகை வீடு வேண்டும் என விசாரித்தனர். அங்கிருந்த வீட்டின் உரிமையாளர் பெண், வாடகை மற்றும் மற்ற விபவரங்களை கூறினார். அப்போது, அந்த இளம்பெண் குடிக்க தண்ணீர் கேட்டார்.
இதையடுத்து அவர், உள்ளே தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றார். வாலிபரை வெளியே நிற்க வைத்த இளம்பெண், அவரை பின் தொடர்ந்து சென்று, அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், சுதாரித்து கொண்டு கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கிருந்த வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். சிலர், வீட்டுக்குள் சென்றபோது, இளம்பெண் கயிற்றால், வீட்டின் உரிமையாளரை கழுத்தை நெரிப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
உடனே அவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர், இருவருக்கும் தர்மஅடி கொடுத்து, ஒசூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காதல் ஜோடி என தெரிந்தது.
இதற்கிடையில் போலீசார், அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, சுத்தியல், கொறடு, திருப்புளி, கத்தி, கையுறை, கயிறு ஆகியவை இருந்தன. தொடர்ந்து போலீசார், இவர்கள் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களாக, இவர்களுக்கு பின்னணியில் வேறு யரேனும் இருக்கிறார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.