ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் ஊழல்; கணக்கு காட்டி கதையை முடித்த ஒப்பந்தகாரர்கள்; குடிநீரின்றி மக்கள் அவதி...
சிவகங்கை
சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் ஊழல் நடந்துள்ளது என்றும், ஒப்பந்தாரர்கள் பல இலட்சம் வீணடிக்கப்பட்டது என்றும் மக்கள் பகிரங்கமாக புகார் கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலேயே மிகவும் வறண்ட பகுதி இளையான்குடி. இங்கு குடிநீர் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வறட்சி கால சிறப்பு நிதியின்கீழ் இளையான்குடியில் 11 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதில் கிடைக்கும் தண்ணீர் மக்களின் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை.
இந்த ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் 370 அடி ஆழத்தில் போடப்பட்டதாகவும், அதற்குரிய திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அவை 250 அடிக்குள் மட்டுமே போடப்பட்டதாகவும், குறைந்த திறன் கொண்ட மின் மோட்டார்களே பொருத்தப்பட்டதாகவும், இதனாலேயே தண்ணீர் கிடைக்கவில்லை என்று மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு செய்து, ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். மேலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் பல இலட்சம் வீணடிக்கப்பட்டதுடன், ஊழல் நடந்துள்ளது என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளை கிணறுகள் சரிவர அமைக்கப்படாததால் தற்போது இளையான்குடியில் மேலும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதுகுறித்து த.மு.மு.க. நகர தலைவர் அல்ஹாப், செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட தலைவர் துல்கருணை சேட், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது ஹாதி, பொருளாளர் முஸ்தபா ஆகியோரும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
அதில், "இளையான்குடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை. இதில் ஒப்பந்தகாரர்கள் பல இலட்சம் ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடைபெறும்" என்று எச்சரித்துள்ளனர்.