இன்று முழு ஊரடங்கு… கட்டுப்பாட்டு வளையத்தில் கோவை… ஆட்சியர் அதிரடி
கோவையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
கோவை: கோவையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் களம் இறங்கி செயல்பட்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக 2வது வாரமாக தமிழகம் முழுவதும் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 18 வயது கடந்த 30 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் எந்த மாவட்டங்களில் எல்லாம் கொரோனா வேகம் எடுக்கிறதோ அங்கே எல்லாம் மாவட்ட ஆட்சியர்களே உரிய கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதனை முன்னிட்டு, கொரோனா தொற்றுகள் அதி வேகத்தில் பரவி வரும் கோவையில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என்பதால் இன்று கோவையில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
காலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் இறைச்சிக்கடைகள் இயங்கவில்லை. காய்கறி, பால் உள்ளிட்ட அத்திவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறந்துள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படவில்லை.
ஓட்டல்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவையில் நேற்று மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 215 பேர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.