4 நாட்களில் 55 பேருக்கு கொரோனா...! கொரோனாவின் கூடாரமாக மாறுகிறதா சென்னை ஐஐடி ?
கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, இதனால் மக்கள் அலட்சியமாக இருந்துவிடாமல், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்..
ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார், பின் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஐ ஐ டி வளாகத்தில் மொத்தமாக 1420 பேர் பரிசோதனை மேற்கொண்டதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் இன்று 55 ஆக அதிகரித்துள்ளது. அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. ஆதனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கேயே தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் XE பாதிப்பு இல்லை
விடுதியின் மூலம் தொற்று பரவியது தெரியவந்துள்ளது. இதனால் 13 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளாகத்தில் கொரோனா பரவி வருவதால் 95% விழுக்காடுக்கு மேல் ஐஐடியில் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள். மக்கள் அனைவரும் இதேபோல் முககவசம் அணிய வேண்டும். எனவும், தமிழகத்தில் தற்போது 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர், ஆக்சிஜன் 7நபர்கள், ஐசியுவில் 2 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். தற்போது XE பாதிப்பு தமிழகத்தில் இதுவரையும் இல்லை. மார்ச் 2020 இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது தேவை இல்லை.. ஐ ஐ டி யில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை அவர்களே தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து இருக்கிறார்கள்.
பதற்றம் தேவையில்லை
மேலும் தடுப்பூசியை செலுத்துவதை விரிவு படுத்த வேண்டும். தமிழக அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசி உள்ளது. 1.46 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வில்லை. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒரே நாளில் மக்கள் வந்தாலும் நாங்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம். பள்ளி கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டு இருக்கிறோம். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. ஆனால் அதனை நினைவில் வைத்திருக்க வேண்டும்" என தெரிவித்தார்.