ஊரடங்கு ரத்தால் காசிமேட்டில் ‘குவிந்த’ பொதுமக்கள்.. மீன் வாங்க ஆர்வம்.. கொரோனா பரவும் அபாயம்
கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் முதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது.
இரவு நேர ஊரடங்கு இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கடந்த 27ம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடந்தது.
இதில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஜனவரி 7ம் தேதி முதல் நடைமுறையிலிருந்த ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மீன்கள் வரத்து குறைவால், விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் பொது மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.