பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் தீர்மானம்;
கரூர்
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய கோரி கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு அதன் மாவட்டத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நித்யா, மீனா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில இணைச் செயலர் ஜான்பிரிட்டோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
இக்கூட்டத்தில், "ஒப்பந்த (எம்ஆர்பி) செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
மாற்றுப் பணிகளை ரத்து செய்ய வேண்டும்.
மாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற செவிலியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் செவிலியர்கள் பூங்கோதை, டெய்சி, பிரவீனா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.