Continuous breeze Land drown Agricultural crop damage Cow market slows down ...

ஈரோடு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஈரோட்டின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது, விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மாட்டுச் சந்தையில் வியாபாரமும் மந்தமாயின.

ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் கடந்த சில நாள்களாக காலையில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதுமாக இருந்து வருகிறது.

நேற்று வழக்கம்போல் காலை வெயில் அடித்ததைத் தொடர்ந்து மதியம் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழையாக தூறத் தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை மாலை 4 மணி வரை மணி நீடித்தது. அதன்பின்னர் சாரல் மழை தூறிக் கொண்டே இருந்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் சென்றதால் மக்கள் சாலைகளில் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டகாஜனூர், சூசைபுரம், மல்லன்குழி, பாரதிபுரம், மெட்டல்வாடி, தலமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கி இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கும்டாபுரம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கும்டாபுரம் - ஆசனூர் சாலையில் கும்பாரகுண்டி தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த வழியாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தாளவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் அனைத்தும் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அதேபோல ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அடிமாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இச்சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளைக் கொண்டு வருகின்றனர்.

மாடுகளைக் கொள்முதல் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர்.

வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகி வருகின்ற நிலையில், ஈரோடு சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

இதனால், கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து நேற்று குறைவாகவே இருந்ததால் அதிக அளவில் வந்திருந்த உள்ளூர், வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.