continues rain in Theni dried lumps filled with water

தேனி

தேனியில் பெய்துவரும் தொடர் மழையால் வைகை அணை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளாக வறண்டு கிடந்த கண்மாய்களில் கூட தண்ணீர் வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கத்தரி வெயில் தொடங்கிய நாளில் இருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும், கம்பம், உத்தமபாளையம், மேகமலை, போடி ஆகிய பகுதிகளிலும், மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெர்ய்து வருகிறது.

இந்த தொடர் மழையின் எதிரொலியாக, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொட்டக்குடி ஆறு, முல்லைப்பெரியாற்றில் இருந்து அதிக அளவில் வைகை அணைக்கு தண்ணீர் வந்து சேருகிறது. 

இதேபோல தேவாரம், சிலமலை, ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக உப்புக்கோட்டை அருகே டொம்புச்சேரியில் உள்ள டொம்பச்சியம்மன் கண்மாய், போசன் கண்மாய், மணியன் குளம், சின்னகரடு பெரிய கண்மாய், அம்மாபட்டி வல்கரடு கண்மாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகள் மூலம் விநியோகம் செய்யப்படும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள்ளது.

தேனியில் பெய்து வரும் தொடர்மழையால் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு தற்போது தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தண்ணீரை பயன்படுத்தி மக்காச்சோளம், வெள்ளை சோளம், கம்பு போன்றவற்றை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.