பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி இயங்க முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி...
பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி இயங்க முடியாது எனவும் பாலில் கலப்படம் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாகவும் இத்தகைய பாலை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு தனியார் பால் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
தனியார் பாலில் கலப்படம் குறித்து முதலமைச்சரிடம் விளக்கினேன் எனவும், விருப்பு வெறுப்பு இன்றி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி அறிவுறுத்தினார்.
தவறு யார் செய்துள்ளார்கள் என்பது ஆய்வின் முடிவில் தெரியவரும். சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வந்திருக்கின்றன. தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் செயல்பட முடியாது.
மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் இனி இயங்க முடியாது.
பாலில் கலப்படம் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் தரத்தையும் பரிசோதித்தோம். அதில் ரசாயனம் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது.
பார்மால்டிஹைடு என்ற ரசாயனம் கலந்த பாலை குடித்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம்.
ஆவின் பாலில் கலப்படம் உள்ளதாக நிரூபிக்க முடியுமா?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.