யாரைக் கேட்டு 12 ரூபாயை எடுத்தீங்க? அதற்கு பதிலா ரூ.8000 கொடுங்க..! வங்கி மேலாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் வங்கிக் கணக்கிலிருந்து 12 ரூபாய் எடுத்த வங்கிக்கு 8000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், அங்குள்ள கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். பிரதமர் காப்பீடு திட்டத்தின்மூலம் ஐயப்பன் வங்கிக் கணக்கில் இருந்து அவரது ஒப்புதல் இல்லாமல், கனரா வங்கி 12 ரூபாய் எடுத்துள்ளது.
இதுகுறித்து நாங்குநேரி கனரா வங்கிக் கிளை மேலாளர் மீது திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜயப்பன் சார்பில், வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து எடுத்த 12 ரூபாயை வங்கி திரும்பக் கொடுத்துவிட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர், மனுதாரர் ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து 12 ரூபாயை அவரது அனுமதி பெறாமல் காப்பீடு செய்தது வங்கியின் சேவை குறைபாடு என தெரிவித்தனர். இதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 5000 ரூபாயும் வழக்கு செலவும் 3000 ரூபாயும் என மொத்தம் 8000 ரூபாயை ஐயப்பனுக்கு வழங்குமாறு வங்கி மேலாளருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கும் வங்கிகளுக்கு சரியான சவுக்கடி..