இரு சமுதாயத்தினரிடையே மோதல்; மோட்டார் சைக்கிளில் சென்ற இருவருக்கு கத்திகுத்து;
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு சமுதாயத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை வேறொரு சமுதாயத்தை சேர்ந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகை பக்கமுள்ளது கே.என்.தொட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், பேரிகை காலனி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை கே.என்.தொட்டியைச் சேர்ந்த இலட்சுமய்யா என்பவரின் மகன் சீனிவாசன் (20), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (19) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர்.
பேரிகை அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வழிமறித்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்திவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதில் இருவருக்கும் பலத்த இரத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த சீனிவாசன், ஜெயராமன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தி குத்தில் காயம் அடைந்தவர்கள் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை கத்தியால் குத்தியவர்கள் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பேரிகை சுற்று வட்டார பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து காவலாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவ கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக் ராஜ் மற்றும் பேரிகை காவலாளர்கள் அவர்களை தேடி வருகின்றனர்.