Confessions Purushothaman

பெண்ணிடம் அனுதாபம் ஏற்படும் வகையில் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பேன் என்றும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன் என்றும் கல்யாண மன்னன் புருஷோத்தமன், போலீசாரிடம் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த இவருக்கு 57 வயது ஆகிறது. புருஷோத்தமனுக்கு 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். 

புருஷோத்தமன் தன்னை தொழிலதிபர் என்று சொல்லிக் கொண்டு, இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் கோடிக்கணக்கி பணத்தைச் சுருட்டி உள்ளார். இந்த தகவல் அண்மையில் வெளியானது.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமுதவள்ளி மூலமாக புருஷோத்தமன் லீலைகள் அம்பலமாகியுள்ளது. இதற்கு திருமண தகவல் மையத்தை சேர்ந்த இரண்டு பேர் உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவரை இழந்த குமுதவள்ளி, காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக புஷோத்தமனைச் சந்தித்தார். குமுதவள்ளி உட்பட 8 பெண்கள், கொடுத்த புகாரின்பேரில் புருஷோத்தமனை போலீசார் தேடி வந்தனர். திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

புருஷோத்தமனிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சபிதா, உஷாராணி, விமலா, இந்திராகாந்தி, சாந்தி, சித்ரா, குமுதவள்ளி, சுசிலா ஆகியோரை ஏமாற்றியது தெரியவந்தது. ஆனாலும் பலரிடம் இதுபோல் ஏமாற்றி 20 கோடிக்கும் மேல் ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புருஷோத்தமனிடம் நேற்று போலீசார் நடத்திய விசாரணையில், முதலில் நான் பெண் பார்க்க செல்லும் வீடு வசதியானதா? என்பதை உறுதி செய்வேன். பெண்ணின் குடும்பத்தினரிடம் என்னை தொழிலதிபர் போலக் காட்டிக்கொள்வேன். திருமண தகவல் மைய நிர்வாகிகளான மோகன், வனஜாகுமாரி ஆகியோர் இரண்டாவது திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடும் பணக்காரர்களிடம் என்னைப் பற்றி பெருமையாக பேசுவார்கள்.

அவர்கள் கூறுவதை நம்பி, பெண் வீட்டினர் என்னை தொடர்பு கொள்வார்கள். நான் அவர்களைச் சென்று சந்திப்பேன். பிறகு பெண்ணை சந்தித்து அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பேன். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி, பணம் கேட்டு டார்ச்சர் செய்வேன். அவர்களும் பணத்தை வாங்கி தருவர். பின்னர், நான் பணத்துடன் தலைமறைவு ஆகிவிடுவேன் என்று விசாரணையில் புருஷோத்தமன் கூறியுள்ளார்.

வயதான நபர் ஒருவர், ஏராளமான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.