சட்டப்பேரவையில் அறிவித்ததுபோல காலியாக உள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்...
பெரம்பலூர்
தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதுபோல காலியாக உள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை அரசுப் பள்ளிகளில் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு, ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஆயத்த கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் இரா.தாஜூதின், சுரேஷ் ஆகியோர் தலைமையில் பெரம்பலூரில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பொறுப்பாளர்கள் மருது, ரஞ்சித், சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராஜாராம், பழனிவேல், குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும்.
தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை அரசுப் பள்ளிகளில் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும், நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், சங்க பொறுப்பாளர் அ. மும்தாஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.