சிக்குவாரா வேலுமணி? ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு... விரைவில் விசாரணைக் குழு... மு.க.ஸ்டாலின் அதிரடி!!
ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் திடீரென தொடர் கனமழை பெய்தது.
ஒரு நாளில் பல மணிநேரம் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கியது. இதேபோன்று மறு நாளும் பெருமளவில் மழை பெய்தது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகள், புறநகர் மற்றும் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றில் சென்னை தியாகராய நகரும் ஒன்று. சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் என்ன செய்யப்பட்டது. முறைகேடுகள் நடந்திருப்பதே இப்படி மழைநீர் தேங்க காரணம். இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பேரவை விவாதத்தில், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.