பெரிய பூட்டு போடப்பட்ட வணிகவரித்துறை சோதனைச் சாவடிகள்… ஜிஎஸ்டி அமல் எதிரொலி…
நாடு முழுவதிலும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் செயல்பட்டு வந்த வணிக வரித்துறை சோதனை சாவடிகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கல்புதூர், சேனூர் பகுதி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்காணிக்க மாநில வணிகவரித் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதே போன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணதிரி உள்ளிட்ட பிற மாநில எல்லைகளில் வணிகவரித்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான சரக்கு, சேவை வரி விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டதால், ஒரு பொருளை எந்தப் பகுதியில் வாங்கினாலும் ஒரே மாதிரியான வரி நிர்ணயம் இருக்கும் என்பதைக் காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள வணிகவரித் துறைக்குச் சொந்தமான அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.