மீண்டும் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்...
ஈரோடு
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவ-மாணவிகளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலை வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். அதன்பின்னர் 10.30 மணிஅளவில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கிராம பகுதிகளில் இருந்து ஈரோட்டிற்கு வருகிறோம் கூடுதல் பேருந்து கட்டணம் கொடுத்து கல்லூரிக்கு வர மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளர் முருகையன் மற்றும் காவலாளர்களுக்கு அங்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பகல் 11.45 மணிஅளவில் மாணவ-மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.