கல்லூரி மாணவி மர்ம சாவு; யாருக்கும் சொல்லாமல் உடலை எரித்த பெற்றோர் - போலீஸ் தீவிர விசாரணை...
தருமபுரி
தருமபுரியில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கப்போட்டு இறந்தார். அவரது உடலை யாருக்கும் சொல்லாமல் பெற்றொர் எரித்ததால் இதுகுறித்து காவலாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ளது மேல்பூரிக்கல் கிராமம். இந்தக் கிராம த்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. கூலி தொழிலாளியான இவருடைய மகள் குணா (21). நல்லம்பள்ளி அருகே உள்ள கலைக் கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த பெற்றோர் வெளியேச் சென்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது குணா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குணாவின் உடலை எடுத்துச்சென்று சுடுகாட்டில் எரித்துவிட்டனர்.
இதுகுறித்து ஜருகு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், குணா இறந்தது குறித்து காவலாளர்களுக்கோ, வருவாய்த் துறையினருக்கோ தகவல் கொடுக்காமல் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று எரித்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
தொப்பூர் காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்து குணா எவ்வாறு இறந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? எதனால் யாருக்கும் சொல்லாமல் உடலை எரித்தனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.