Collector sudden inspection at the Panchayat Union office Study records of projects

நாமக்கல்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலர்களின் தன்பதிவேடு, நாள்குறிப்பு, நிலுவையில் உள்ள கோப்புகள், வட்டார ஊராட்சி கணக்கு விவரங்கள், கிராம ஊராட்சி கணக்கு மற்றும் வைப்புத்தொகை, கிராம ஊராட்சி மையம், அங்கன்வாடி கட்டுதல், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத்திட்டம், 14-வது நிதிக்குழு மானியம், தாய்திட்டம், நபார்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மானிய நிதி உதவியுடன் தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டும் விபரங்கள், ஊராக வளர்ச்சி துறையினர் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளை கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாக்குமார், மாவட்ட மேலாளர் (வளர்ச்சி) குணாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.