கந்துவட்டி… மீட்டர் வட்டிக்கு பணம் தர்றீங்களா..? கோவை கமிஷனர் வச்ச ‘செக்’
கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம், அதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
கோவை: கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம், அதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு: குடும்பச்சூழல், கொரோனா ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும் பொதுமக்களம், தொழிலாளர்களும், தொழிலதிபர்களும் வட்டிக்கு பணம் கேட்டு கந்துவட்டி நிறுவனங்களை அணுகி பணம் பெறுகின்றனர். கந்து வட்டிக்காரர்கள் சிலர் மீட்டர் வட்டிக்கும் பணம் கொடுத்து வசூலிக்கின்றனர்.
அவர்கள் அலுவலகம் வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்து பணம் கொடுத்து வசூலிக்கின்றனர். கடன் பெற்றவர்கள் பணத்தை செலுத்த தவறும்போது மனிதாபமின்றி கடும் வார்த்தைகளால் பேசி பணத்தை வசூலிக்கிறார்கள். குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு கந்துவட்டி பணம் வாங்கியவர்கள் சிலர் விபரீதமாக முடிவு எடுக்கிறார்கள்.
எனவே கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம். இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.