திமுக கூட்டணியை வீழ்த்தும் வலுவான தேசிய கூட்டணி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரணியில் இணைக்கும் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
TTV Dhinakaran: புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ளார். அதனால் பாஜக கூட்டணி பலமாக இல்லை என கூறுகிறார். பலம் பொருந்திய தேசிய கூட்டணியான எங்கள் கூட்டணி திமுக கூட்டணியை வீழ்த்தும். மக்கள் விரோத திமுக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம் உள்ளிட்டவைகளை அறிவியல் பூர்வமாக நிருபிக்க வேண்டும் அதை தான் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை பெற்று அந்த கூட்டணியில் உள்ளவர்கள் தன்னைப் பிரச்சாரத்திற்கு அழைக்கும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவராக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்.
அமித்ஷாவின் முயற்சி வெற்றி அடையும்
எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிக்கும் பிரச்சாரத்திற்கு வருவாரா என்பதை அவர்தான் கூறவேண்டும். அமித்ஷா தொடர்ந்து 2024 அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் பிளவுபட்ட அதிமுகவை ஓரணியில் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. ஆனால் 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைக்கும் அமித்ஷாவின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அதனால் இந்த தேர்தலில் உறுதியான வெற்றியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பாஜக இந்து அமைப்புக்கள் வளர்ந்துள்ளது
தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் தவறில்லை. தமிழ்நாட்டில் பாஜக இந்து அமைப்புக்கள் வளர்ந்துள்ளது. தேவை ஏற்படும் போது ஒரு மாநாடு நடைபெறும். தற்போது முருகன் மாநாடு நடத்துவதற்கு தேவை இருப்பதால் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியே திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் சென்றவர் தான். 2026ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையப்போவது உறுதி. கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் தான் இருக்கும். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி திமுகவை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இணையாமல் தனித்து நின்றால் வாக்குகளை பிரிப்பதற்கு வேண்டுமானால் அது உபயோகமாக இருக்குமே தவிர திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படாது. எனவே தமிழக வெற்றிக்கழகம் மட்டுமல்ல திமுக எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும்.
ஆகாஷ் பாஸ்கர் யார்?
முதல்வர் டெல்லிக்கு எப்போதுமே தமிழக அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கண்துடைப்புக்காக கூறுகிறார். உண்மையில் முதல்வரின் குடும்பமே முதல்வருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நண்பர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிச் சென்று ஒளிவது ஏன் என்று கருத்துக்கு முதல்வர் பதில் கூற வேண்டும். ரத்திஷ் யார் ஆகாஷ் பாஸ்கர் யார் என்று விளக்க வேண்டும். இதனை மறைப்பதற்காக முதல்வர் டெல்லிக்கு தமிழகம் அவுட் ஆப் கண்ட்ரோல் என்று கூறுகிறார். அதேபோன்று திமுகவும், திமுக அமைச்சர்களும் முதல்வருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடுவதில் தவறு இல்லை. ஏனென்றால் 2024 தேர்தலில் பாஜகோடு பாமக கூட்டணி வைத்தது கூட்டணி கட்சி என்ற முறையில் இந்த கட்சியின் பிரச்சனையில் பாஜக தலையிடுவது தவறில்லை என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி என டிடிவி.தினகரன் கூறியுள்ள கருத்து எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.