ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்ககோரி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
கடலூர்
ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க கோரி கடலூரில் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் பழைய ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் வேலாயுதம், சாந்தகுமார், இணை செயலாளர்கள் சக்திவேல், செல்வம், மண்டல இணை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
“தொடக்க வேளாண்மை, நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுபற்றி மாவட்ட செயலாளர் சேகர் கூறியது:
“ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 22–ஆம் தேதி முதல் நடக்க இருக்கும் காலவரையற்ற போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்பார்கள்” என்று எச்சரித்தார்.
இதில், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயணி, சங்க நிர்வாகிகள் திருமலை, தம்புராஜ், ஜெயச்சந்திரன், சுந்தரவடிவேல், கணேசன், தனசங்கர் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள், நியாயவிலை அங்காடி விற்பனையாளர்கள், மாவட்ட அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.