தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் ஒரு நிகழ்வாக 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதுமான நிலையில், அதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இன்று மற்றுமொரு நிகழ்வாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பன்னிரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

12.02.2022 அன்று, இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், 13.02.2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றும், அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துமாறும் இந்திய பிரதமர் மோடியை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டுமெனக் கோரியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.