தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டி அடிக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த இலங்கைக் கடற்படையினர் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 31-1-2022 அன்று 12 மீனவர்கள் மீன்பிடி விசைப்படகில் நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 3 சம்பவங்களில், 68 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதோடு, அக்குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
