”கழுவேலி ஈரநிலம்” பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு..!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநிலம் , கடற்கரை சதுப்பு நில ஏரியாகும். இந்த ஏரி வங்காள விரிகுடாவின் அருகில் ஏறக்குறைய புதுச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த சதுப்பு நில ஏரியானது, வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாகவும் குஞ்சுபொரிக்க வரும் இடமாகவும் முக்கிய பங்காற்றி வருகிறது.
பெரிய பரப்பளவு கொண்ட சதுப்பு நிலத்தினை, விவசாயம், வன வேட்டை, காடழிப்பு, அதிகரித்து வரும் இறால் பண்ணைகள் போன்றவற்றால் ஆக்கிரமித்து வருவதால் இந்த இயற்கை கொடை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அதிகளவு பறவைகள் வலசை வரும் பகுதியாக இவ்விடம் உள்ளதால் , இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுக்குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் , சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் இந்த அரசு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் பழவேற்காடு, வேடந்தாங்கல், கோடியக்கரை,வெள்ளோடு, கரைவெட்டி, கூந்தன்குளம், வேட்டங்குடி உள்ளிட்ட 15 பறவை சரணாலயங்கள் உள்ளது நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பறவைகள் சரணாலயங்கள் பகுதிகளுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகின்றன