பள்ளிகொண்டா சுங்கச்சாவடி ஊழியர், காரில் வந்த திமுக முன்னாள் கவுன்சிலரிடம் காசு கேட்டதற்கு காசு தரமாட்டேன் என்று கூறி காரில் கண்ணை மூடி உட்கார்ந்துக் கொண்டார்.
சென்னை - பெங்களுரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா அருகே சுங்கச்சாவடி ஒன்று உள்ளது.
நேற்று மாலை 3 மணியளவில் வேலூர் மாநகராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சத்தியமூர்த்தி குடும்பத்துடன் காரில் பெங்களுருவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியைக் கடக்கும்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் நுழைவுக் கட்டணத்தைக் கேட்டனர்.
அதற்கு அவர் கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், இந்த கார் வேலூர் தொகுதி கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுடையது. எனவே, சுங்க வரியை செலுத்தமாட்டேன் என்று ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டார்.
இதன் பின்னால் வந்த 13 கரும்பு லாரிகள் மற்றும் கார், பேருந்துகள் வேறு பாதையில் கூட செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றன.
சத்தியமூர்த்தியிடம் சுங்கச்சாவடி மேலாளர் கேட்டும், காருக்கான ஆதாரங்களை காட்டவில்லை. இதனால் பயணிகள் இறங்கி வந்து சுங்கச்சாவடி மேலாளரிடம் எவ்வளவு நேரமாக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூச்சல் போட்டனர்.
சத்தியமூர்த்தியிடம் சுங்க கட்டணத்தைக் கேட்டால், காரின் உள்ளே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
வேறு வழியின்றி கட்டணத்தை வசூலிக்காமலேயே அந்த காரை மேலாளர் அனுப்பி வைத்தார்.
முன்னாள் திமுக கவுன்சிலரின் இந்த செயலால், மக்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பில் சிக்கிக் கொண்டனர்.
