விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - அதிரடியாக உத்தரவிட்டு அசத்திய மதுரை நீதிமன்றம்...
மதுரை
விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜசேகரன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "விராலிமலை விவசாயிகள் சங்கத்தில் நான் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளோம்.
நாங்கள் மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றுள்ளோம். விவசாயம் பொய்த்துப்போனால் இத்திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் பயிர்கள் கருகியது. இதனால் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். காப்பீட்டு திட்டத்தின்படி நெற்பயிருக்கு ரூ.23 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் தொகையை இறுதி செய்தனர்.
இந்த ஆய்வில் விராலிமலை கிராமத்திற்கு 11.55 சதவீதமும், இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு 66.66 சதவீதம் வரையும் இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்துள்ளனர்.
பருவ மழை பொய்த்ததால் பெரும் நட்டத்தைச் சந்தித்த எங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்ததில் ஏற்பட்ட வேறுபாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும். விராலிமலை விவசாயிகள் சங்கத்தினருக்கு உரிய இழப்பீட்டை 12 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார்.
விசாரணையின் முடிவில், "மனுதாரர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை வழங்குதில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு அசத்தினார்.