அதிகரிக்கும் பெண் சிசு கொலை..? - சிக்கிய சிசிடிவி.. கொலையாளிக்கு வலைவீச்சு..
தஞ்சை அரசு மருத்துவமனையில் பயன்படுத்தபடாத கழிவறையில் இருந்து மர்மமான முறையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெண் சிசு கொலை மீண்டும் அதிகரித்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் பயன்படுத்தபடாத கழிவறையில் இருந்து மர்மமான முறையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெண் சிசு கொலை மீண்டும் அதிகரித்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள், அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தாத மேற்கத்திய வகை கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தண்ணீர் தொட்டிக்குள் பிறந்த பெண் சிசு கொலை செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தை கொலை செய்யபட்ட சம்பவம் தெரிந்ததையடுத்து, மருத்துவமனை தரப்பில் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டது. விரைந்த வந்த டி.எஸ்.பி கபிலன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உள்ளிட்ட போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை முழுவதும் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய சென்றபோது, மேற்கத்திய கழிவறையில் பச்சிளம் குழந்தை சடலமாக கழிவறையில் மேல் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்ததை பார்த்துள்ளனர். இதனால் கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் பெண் சிசுவை தண்ணீரில் அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த சிசிடிவில், இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்கு செல்கிறார். அவருடைய வயிறு வீங்கியிருப்பது போல் தெரிகிறது. பின்னர் அந்த பெண் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் கழிவறை இருக்கும் பகுதியிலிருந்து வெளியே வருகிறார் . இதன் காட்சிகளை வைத்து பார்க்கும் போது சந்தேகத்தின் அடிப்படையில் நைட்டி அணிந்து சென்ற பெண் யார் என்பது குறித்தும் அவர் தான் பிறந்த குழந்தையை கொலை செய்ததா எனும் கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் கூறிய போலீசார், விசாரணையின் முடிவிலேயே பிறந்த குழந்தையை கொலை செய்தவர் யார் என்பதும் குழந்தையின் தாய் யார் என்பது குறித்தும் தெரிய வரும் என்றனர். நேற்று இரவுக்கு பிறகோ அல்லது இன்று காலையில் தான் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. யார் எதற்காக கழிவறையில் பெண் குழந்தையை அமுக்கி கொலை செய்தார்கள் என தெரியவில்லை என்று மருத்துவமனை தரப்பில் சொல்லபடுகிறது. இந்த சம்பவத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.